மும்பை: இந்திய பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்செக்ஸ் 84,200 புள்ளிகளையும், நிஃப்டி 25,700 புள்ளிகளையும் கடந்துள்ளது.
இதனால் வங்கி, நிதி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர் சேவை நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களின் பங்குகளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 25,525 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. பகல் 12 மணி அளவில் 25,701 என்ற உச்சத்தை நிஃப்டி எட்டி இருந்தது. முந்தைய நாள் வர்த்தக முடிவோடு ஒப்பிடும் போது சுமார் 285 புள்ளிகள் நிஃப்டி ஏற்றம் கண்டிருந்தது.
இதே போல மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளும் சுமார் 84,000+ புள்ளிகளை கடந்தது. இன்று காலை வர்த்தகம் 83,603 புள்ளிகளுடன் சென்செக்ஸ் தொடங்கியது. பகல் 12 மணி அளவில் 84,138 புள்ளிகளை எட்டியது. முந்தைய நாள் வர்த்தகத்தின் முடிவோடு ஒப்பிடும் போது சுமார் 975 புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டது. அதிகபட்சமாக 84,240 புள்ளிகள் வரை சென்செக்ஸ் இன்று எட்டி இருந்தது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், அண்மையில் வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொண்டது இதற்கு காரணம் என வர்த்தக துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.