நியூயார்க்: இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர் நிறுவனம் தற்போது திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளது.
நம் வீடுகளின் சமையலறையில் இன்று அலங்கரிக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு தொடக்கப் புள்ளி இந்த நிறுவனம் தான். உணவு, சமையல் பொருள் போன்றவற்றை டப்பர்வேர் நிறுவன தயாரிப்பு பொருட்களில் பலரும் சேகரித்து வைத்த காலம் உண்டு. கால ஓட்டத்தில் மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து அதிகரித்த விழிப்புணர்வு காரணமாக இந்த திவால் என்று டப்பர்வேர் நிறுவனம் அறிவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா - ஒர்லாண்டோவை தலைமையிடமாக கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது. நுகர்வோர் பொருட்களை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை மேற்கொள்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தோனேசியா மற்றும் ஜெர்மனி நாட்டில் இந்நிறுவன தயாரிப்புகள் விற்பனையில் முன்னணியில் இருந்தன.
ஆனால், இப்போது அந்த நிலை உலகம் முழுவதும் அப்படியே மாறியுள்ளது. வணிக ரீதியான வியாபாரம் குறைந்தது. இந்த நிறுவனத்தை யாரும் வாங்கவும் முன்வரவில்லை. இந்த நிலையில் தான் திவால் என அறிவித்துள்ளது.
» அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை முயற்சி
» அதிகப்படியான வாக்குப்பதிவு மூலம் ஜம்மு காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது: பிரதமர் மோடி
உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு சார்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தான் விற்பனை பாதிக்க காரணம் என டப்பர்வேர் நிறுவனம் அதன் திவால் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பங்கு மதிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது. நிறுவனம் தற்போது எதிர்கொண்டு வரும் நிதி சிக்கல் குறித்து அதன் சிஇஓ லாரி ஆன் கோல்ட்மேனும் வெளிப்படையாகப் பேசி உள்ளார்.