மும்பை: பிரதமர் நரேந்திர மோடி 3-வதுமுறையாக பதவியேற்று நேற்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. சுவாரஸ்யமாக, மோடியின் பிறந்தநாளும் (செப்.17) ஒன்றாக அமைந்துவிட்டது. இந்த 100 நாட்களில் சென்செக்ஸ் 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது 6,300 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. மூலதன ஆதாய வரி அதிகரிப்பு மற்றும்மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாதது ஆகிய எதிர்மறை நிகழ்வுக்கிடையிலும் சந்தையின் செயல்பாடு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
பிரதமர் மோடியின் 100 நாட்கள்செயல்பாடுகளின் எதிரொலியாக, ஸ்மால்கேப் பங்குகள் விதிவிலக்கான வகையில் செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. அதன் குறியீடு 18 சதவீதம் அதிகரித்துள்ளது. பிஎஸ்இ ஐடி குறியீடு மற்றும் பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு ஆகியவை தலா 22 சதவீதம் வருமானத்தை வழங்கியுள்ளது. 17 சதவீத வருவாயுடன் நுகர்வோர்பொருட்கள் துறை நெருக்கமாக பின்தொடர்கிறது. மாறாக, உலோகக் குறியீடு 3 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. அதேபோன்று ரியல் எஸ்டேட் துறையும் 1 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
ஸ்மால்கேப் பங்குகள் அபாரம்: சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மால்கேப் பங்குகளில், ரெஃபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 100 நாட்களில் 221 சதவீத ஏற்றத்துடன் தனித்து நிற்கிறது. பிசி ஜுவல்லர்ஸ் 175 சதவீதமும், பாலு ஃபோர்ஜ் 167 சதவீதமும், கிராவிட்டா இந்தியா 131 சதவீதமும், பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் 118 சதவீதமும், காட்ஃப்ரே பிலிப் இந்தியா 114 சதவீதமும், நியூலாண்ட் லேபரட்டரீஸ் 103 சதவீதமும் அதிகரித்துள்ளன.