அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 5ஜி மொபைல் சந்தையில் 2-வது இடத்தில் இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இதுகுறித்து கவுன்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை: 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா தற்போது 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. முதலிடத்தை சீனா தக்கவைத்துள்ளது.

2024-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய 5ஜி மொபைல் ஏற்றுமதி 20 சதவீதம் வளர்ச்சி கண்டது. இதில் ஆப்பிள் 5ஜி மொபைல்போன் முக்கிய பங்கை வழங்கியது. மொத்த வளர்ச்சியில் ஆப்பிள் மட்டும் 25 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளது. ஆப்பிளின் இந்த வளர்ச்சி ஐபோன் 15 மற்றும் ஐபோன் 14 சீரிஸ்கள் மூலம் சாத்தியமாகியுள்ளது. பட்ஜெட் பிரிவில் 5ஜி மொபைல்போன்களின் வருகை அதிகரித்துள்ளது சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்தப் பிரிவில் ஷாவ்மி, விவோ, சாம்சங் பிராண்டுகளின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ், எஸ் 24 சீரிஸ் 21 சதவீத பங்கை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. 2024 முதல் பாதியில் 5ஜி மாடல்களுக்கான டாப் 10 பட்டியலில் ஆப்பிள் மற்றும் சாம்சங் மாடல்கள் தலா ஐந்து இடங்களைப் பிடித்தன. ஆப்பிள் முதல் 4 இடங்களைப் பிடித்தது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியங்களிலும், 5ஜி கைபேசி ஏற்றுமதி வளர்ச்சியைக் கண்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE