அந்நிய நேரடி முதலீட்டில் 6-வது இடத்தில் தமிழகம்: முதலிடத்தில் மகாராஷ்டிர மாநிலம்

By செய்திப்பிரிவு

நாக்பூர்: அந்நிய நேரடி முதலீடுகளை கவரும் மாநில வரிசையில் 6-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இதுகுறித்து மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: அந்நிய நேரடி முதலீடுகளை பெறுவதில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த நிதியாண்டின் முதல்காலாண்டில் ரூ.70,795 கோடி அந்நிய முதலீட்டை மகாராஷ்டிரா பெற்றுள்ளது. இரண்டாவதாக கர்நாடக மாநிலம் ரூ.19,059 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. மூன்றாவதாக டெல்லி ரூ.10,788 கோடியை ஈர்த்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரூ.9,023 கோடி முதலீடு பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. 5-வது இடத்தில் உள்ள குஜராத் ரூ,8,508 கோடி பெற்றுள்ளது. 6-வது இடத்தில் உள்ள தமிழகம் ரூ.5,818 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. 8-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசம் ரூ.370 கோடி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரூ.311 கோடி பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு மத்திய தொழில் வளர்ச்சி துறை கூறியுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த முதலீட்டு தொகையான ரூ.1,34,959 கோடியில் 52.46 சதவீதத்தை (ரூ.70,795 கோடி) மகாராஷ்டிர மாநிலம்பெற்று முதலிடத்துக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மகாராஷ்டிராவுக்கு வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுஉள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE