திருப்பதி: இலங்கை-இந்தியா இடையே சாலைவழி வணிகம் அவசியம் என திருப்பதி வந்த கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலை கழகம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகம் இணைந்து நடத்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான அமிர்தலிங்கம் பேசியதாவது: “இந்தியாவிற்க்கும் இலங்கைக்கும் இடையே சாலைவழி வணிகம் அவசியம். இதற்காக ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு 30 கி.மீ வரை பாலம் அமைத்திட வேண்டும். இதன் முலம், தொழில் மற்றும் சுற்றுலா துறைகள் மேம்படும்.
இலங்கையில் 30 ஆண்டுகள் வரை நடந்த உள்நாட்டு போர், மற்றும் சமீபத்திய பொருளாதார சீர்கேடுகளால் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது. இதனால் நாங்கள் தாய் போல் பாவிக்கும் இந்தியா உதவ முன் வந்தது. ஏற்கனவே சுனாமி இயற்கை பேரிடர் வந்தபோது கப்பல்களை அனுப்பி இந்தியா இலங்கை மக்களை காப்பாற்றியது.
கரோனா என்கிற மிகக் கொடிய தொற்று பரவிய போது இந்தியா தடுப்பூசிகளை வழங்கி காப்பாற்றியது. இதனை தொடர்ந்து, பொருளாதார சீர்கேடு ஏற்பட்ட போது இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது உணவு, பால், மருந்து வகைகளை அனுப்பி, கை கொடுத்து உதவியது. ஆதலால், எப்போதுமே எங்களுக்கு இந்தியாவும் ஒரு தாய் நாடே.
» ராஜாகுப்பம் ஆசிரியர் கோபிநாத்துக்கு தேசிய நல்லாசிரியர் விருது - கலையும் கல்வியும் இவர் சிறப்பு!
» “என் சிறுகதையில் உள்ள அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே உள்ளன” - எழுத்தாளர் சோ.தர்மன்
இதேபோன்று, இந்தியாவை சுற்றிலும் உள்ள இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போதும் இந்தியா மட்டுமே தொடர்ந்து 6 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துபோகும் தன்மையும் முக்கிய காரணமாகும்.
பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் போன்றவற்றின் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரமும் நிலையாக உள்ளது” இவ்வாறு பேராசியர் அமிர்த லிங்கம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைகழக டீன் கிரண் பிரசாத், மகளிர் கல்வி ஆராய்ச்சி பிரிவின் தலைவர் பி. நீரஜா, கருந்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மாதவி, சுனிதா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.