கோவை: மத்திய அரசு தங்கத்தின் மீதான 15 சதவீத இறக்குமதி வரியை 6 சதவீதமாகக் குறைத்தும், போர் பதற்றம், சீனா மீண்டும் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கோவையில் தங்க நகை தொழில்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கரோனா பரவலுக்குப் பின்னர்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடுகள்இடையிலான போர் உள்ளிட்ட காரணங்களால் வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்துஅதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இந்தியாவில் தங்கத்துக்கு 3 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுகிறது. இறக்குமதி வரி முன்பு 15 சதவீதம் இருந்தது. மக்கள் நலன் கருதி கடந்த மத்தியபட்ஜெட்டில் 9 சதவீதம் குறைக்கப்பட்டு, தற்போது 6 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தங்கத்தின் மீதானஇறக்குமதி வரி குறைக்கப்பட்டபோதும், தங்கம் விலை தொடர்ந்துஉயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவுன் ரூ.64 ஆயிரமாக உயரும்: இஸ்ரேல்-ஹமாஸ், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வதந்திகள் பகிரப்படுவது, சீனாவின் மத்திய வங்கி தங்கத்தில் மீண்டும் அதிகஅளவு முதலீடு செய்து வருவது உள்ளிட்டவை தங்கத்தின் விலைஉயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும்.
தற்போது ஒரு பவுன் தங்கத்தின் விலை (22 காரட்) 55,166-யாக உள்ளது. விரைவில் கிராம் ரூ.8 ஆயிரமாகவும், பவுன் ரூ.64 ஆயிரமாகவும் உயர வாய்ப்புள்ளது.
தற்போது ஆவணி மாதம்தொடங்கியுள்ள நிலையில் திருமண சீசன் ஆரம்பமாகியுள்ளது. எனினும், விலை உயர்வால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. புரட்டாசி, ஐப்பசி என அடுத்து வரும் மாதங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கநகைவிற்பனை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.