கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக கிளை அலுவலகத்தில் சிறப்பு தொழில் கடன் விழா நடக்கிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புள் 'தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும். உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
கோவையில் ஹுசூர் சாலை, அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் செயல்பட்டு வரும் கிளை அலுவலகத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 6-ம் தேதி வரை நடக்கிறது. இச்சிறப்பு தொழில் கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு சிறப்பு தொழில் திட்டங்கள். மத்திய மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது.
மேலும், தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை விரைந்து பெற்று தர ஆவண செய்யப்படுகிறது. ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக வட்டி மானியம் வழங்கப்படும். இந்நிகழ்வில் பங்கேற்று தொழில்முனைவோர் பயன் பெறலாம்' என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.