கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த மே, ஜூன் மாதங்களில் கடும் வெயில் மற்றும் அதிகனமழையால் காய்கறி பயிர்கள் அழிந்தன. இதனால் தமிழகம் மற்றும் ஆந்திர, கர்நாடக பகுதிகளிலும் காய்கறி உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக இவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் தற்போது காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அவற்றின் விலை குறைந்து வருகின்றன. பல காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ரூ.10 ஆக குறைவு: குறிப்பாக வெண்டைக்காய், முள்ளங்கி, முருங்கைக்காய், பீட்ரூட், கத்தரிக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், நூக்கல் ஆகிய காய்கறிகளின் விலை நேற்று தலா ரூ.10 ஆக குறைந்துள்ளது. இதேபோன்று கேரட் ரூ.60 ஆகவும், பீன்ஸ் ரூ.20 ஆகவும் குறைந்துள்ளது.

மற்ற காய்கறிகளான பச்சை மிளகாய் கிலோ ரூ.35, உருளைக்கிழங்கு, சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, பெரிய வெங்காயம் ரூ.28, தாக்காளி ரூ.23, அவரைக்காய், பாகற்காய் தலா ரூ.20 என விற்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, “காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்து உள்ளது. செப்டம்பர் வரை விலை குறைந்து இருக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE