சென்னை: எதிர்வரும் 2027-ம் ஆண்டு இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை நிர்வாக இயக்குனர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். தனியார் ஊடக நிறுவனத்துடனான பேட்டியில் அவர் இதனை பகிர்ந்துள்ளார்.
“கடந்த நிதியாண்டில் நாம் எதிர்பார்த்ததை விட இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. அதன் விளைவாக நடப்பு ஆண்டுக்கான எங்களது கணிப்பு மாற்றம் கண்டுள்ளது. தனியார் நுகர்வு மீண்டு வருவதும் இதற்கு மற்றொரு காரணமாக பார்க்கிறோம். இந்த எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டில் 4 சதவீதமாக வளர்ச்சி கண்டது.
நாட்டில் ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ், இருசக்கர வாகன விற்பனையும் அதிகரித்து வருகிறது. பருவமழை காரணமாக இந்த முறை அறுவடையும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் காரணமாக விவசாயம் சார்ந்த வருவாய் அதிகரிக்கும். அது ஊரக பகுதிகளின் நுகர்வில் நிச்சயம் எதிரொலிக்கும். இதன் அடிப்படையில் தான் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ளோம். 2024-25 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியா பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார ரீதியாக உலகின் ஐந்தாவது பெரிய நாடாக மாறியது. இந்நிலையில், கீதா கோபிநாத் இதனை தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இந்தியா என ஐந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.