வங்கிகள் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: மத்திய நிதியமைச்சர் அறிவுரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர்களின் 609-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மத்திய பட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித் துறை செயலாளர் சோமநாதன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கடன் வழங்குதல், வாடிக்கையாளர்களின் முதலீடு ஆகியவற்றில் வங்கிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வங்கிகளில் முதலீடு செய்வது மற்றும் கடன் வழங்குவது என்பது ஒரு வாகனத்தின் இரு சக்கரங்களை போன்றது. தற்போது வங்கிகளில் முதலீடு குறைந்து வருகிறது. ஆனால் கடன்வழங்குவது அதிகரித்து வருகிறது.

முதலீட்டுக்கும், கடன் வழங்குவதற்கும் இடையே உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டும். புதுமையான, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவேண்டும். பொதுமக்கள் அதிகளவில் வங்கிகளில் பணம் சேமிப்பதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதன்பிறகு நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இது, இந்திய ஜவுளி துறையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் வங்கதேசத்தில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அந்த முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். வங்கதேசத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்திய பொருளாதாரத்தில் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படும் என்பதை கணிப்பது கடினம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE