வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கி தொடர்ந்து 9-வது முறையாக வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்யவில்லை.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று கூறியதாவது: பணவீக்க சூழலை கருத்தில் கொண்டு பணவியல் கொள்கை குழுவின் 6 உறுப்பினர்களில் 4பேர் ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாகவே தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதவு தெரிவித்துள்ளனர். எனவே, ரெப்போ விகித்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

ஜூன் மாதத்தில் பணவீக்கம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அதிகமாக இருப்பதே காரணம். உணவுப்பணவீக்கம் என்பது தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. விலை நிலைத்தன்மை இல்லாமல், அதிக வளர்ச்சியை நிலைநிறுத்த முடியாது. அதனை கருத்தில் கொண்டு நாட்டின் பணவீக்க நிலவரத்தை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடப்பு 2024-25நிதியாண்டில் நாட்டின் ஜிடிபிவளர்ச்சி 7.2 சதவீதமாகவும், சிபிஐபணவீக்கம் 4.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ மூலம் வரி செலுத்துவதற்கான வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், காசோலை பரிவர்த்தனையை சிலமணி நேரங்களில் செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில்லறை முதலீட்டாளர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்வது தவிர்த்து மாற்று முதலீட்டு வழிமுறைகளில் மிகவும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இது, கடன் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது. இதனால், வங்கிகள் குறுகிய கால வைப்பு தொகை மற்றும் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய வேறு வழிகளை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளது. உள்கட்டமைப்பு பணப்புழக்க சிக்கல்களுக்கு வங்கிகள் ஆளாகக் கூடும்.இதனை உணர்ந்து வங்கிகள் தங்கள் பரந்த கிளை வலையமைப்பைப் பயன்படுத்தி புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலமாக டெபாசிட்களைத் திரட்ட வேண்டும்

டாப்-அப் வீட்டுக் கடன் அதிகரித்து வருவது அமைப்பு சார்ந்தபிரச்சினை இல்லை. அது வரையறுக்கப்பட்ட சில நிறுவனங்களின் பிரச்சினை மட்டுமே. அதுபோன்ற நடைமுறைகளை பரிசீலனை செய்து தீர்வு காண்பதற்கு அறிவுறுத்தப்படும்.

நாட்டில் போலி கடன் செயலிகளின் மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற டிஜிட்டல் கடன்செயலிகளை எளிதில் கண்டறியவும், உண்மையான நிறுவனங்களை அடையாளம் காணவும்டிஜிட்டல் கடன் வழங்கும் ஆப்களின்பொது களஞ்சியத்தை உருவாக்கும் திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. இந்த களஞ்சியத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது கடன் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்யும். இதன் மூலம், அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை நுகர்வோர் எளிதாக அடையாளம் கண்டு அவற்றை புறம்தள்ள முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE