சென்னை: ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி, ஆகஸ்ட் 3-ம் தேதி (சனிக்கிழமை) பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகின்றனர். எனவே, பொது விடுமுறை நாளான நாளை மறுதினம் ஆக.3-ம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆவணப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவு அலுவலகங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும். இது தொடர்பாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவுக்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.