வரிச் சலுகைகள் முதல் ஆந்திரா, பிஹாருக்கு ‘நிதி’ வரை: மத்திய பட்ஜெட் 2024-ன் கவனம் ஈர்த்த அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் கவனம் ஈர்த்த அம்சங்கள் இங்கே...

வேளாண்மைத் துறைக்கான திட்டங்கள்: வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி விடுவிக்கப்படுகிறது; விவசாயிகளால் சாகுபடி செய்வதற்கு பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய அதிக மகசூல் தரக்கூடிய, வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் 32 ரகங்கள் வெளியிடப்படும்; இயற்கை வேளாண்மைக்கு அடுத்த இரண்டாண்டுகளில் நாடுமுழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்; இயற்கை வேளாண்மைக்கு தேவை அடிப்படையிலான உயிரி இடுபொருள் மையங்கள் 10,000 உருவாக்கப்படும்.

கூட்டுறவுத் துறை: கூட்டுறவுத் துறையில் அனைத்துத் தரப்பு வளர்ச்சி மற்றும் முறையான நடைமுறைகளுடன் கூடிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும். விரைவான கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற இலக்குகளுடன் கூடிய கொள்கை வகுக்கப்படும்.

வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும்; தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்; முத்ரா கடனுதவி திட்டத்தின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும். 100 உணவு தரநிலை மற்றும் பாதுகாப்பு பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும். குறு,சிறு நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

> எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் விரைவில் உருவாக்கப்படும். சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அணு சக்தி திட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு சிறிய அளவிலான அணு உலைகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு; உள்நாட்டு அனல் மின் நிலையங்கள் அமைக்க ஊக்குவிக்கப்படும்; உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வரி சீர்திருத்தங்கள்: மின்னணு வர்த்தகத்திற்கான டிடிஎஸ் வரி விகிதம் தற்போதைய 1 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாக குறைக்கப்படும்; குறுகிய கால மூலதன லாபங்கள் மீதான வரிவிகிதம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது; நீண்ட கால மூலதன லாபத்திற்கான வரிவிகிதம் 12.5 சதவீதம் ஆக்கப்படுகிறது; புத்தொழில் நிறுவனங்களுக்கான ஏஞ்சல் வரி அனைத்து முதலீட்டு பிரிவினருக்கும் ரத்து செய்யப்படுகிறது.

விண்வெளி பொருளாதாரம்: விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்தல்; 1000 கோடி ரூபாய் மூலதன நிதியில் விண்வெளி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு நிதி: ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும்; விசாகப்பட்டினம் - சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும்.

பிஹார் மேம்பாட்டுத் திட்டங்கள்: பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும்; பிஹாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படும்; பிஹாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவி; பிஹார் மற்றும் அசாம் மாநிலத்திற்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக பட்ஜெட்டில் தொகுப்பு நிதி ஒதுக்கீடு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE