மத்திய பட்ஜெட் 2024-25: சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தச் சூழலில் இதன் மீது சாமானிய மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.

“கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் சிறப்பானதாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு சார்ந்து அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல், எல்பிஜி போன்ற எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் ரயில்வே சார்ந்த சேவையில் மேம்பாடு உள்ளது. அதை அப்படியே அரசு தொடர வேண்டும்” என மேற்கு வங்க மாநிலம் ஹவுராவை சேர்ந்த அமித் சர்மா தெரிவித்துள்ளார்.

“பட்ஜெட் மக்களுக்கு நல்லது சேர்க்கும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதால் நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு அறிவிப்புகள் இதில் வெளியாக வாய்ப்புகள் உள்ளது” என மஹாவீர் என்பவர் தெரிவித்துள்ளார்.

“எரிவாயு சிலிண்டர்களின் விலை நிச்சயம் குறைக்கப்பட வேண்டும். இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என ஹவுராவை சேர்ந்த கோமல் சிங் தெரிவித்துள்ளார். பால், மாளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதையும் மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இது சார்ந்த வரியை குறைக்க வேண்டும் என சொல்லியுள்ளனர். மொபைல் ரீசார்ஜ் கட்டணம் அதிகரித்துள்ளதையும் மக்கள் மீதான சுமையாக தெரிவித்துள்ளனர்.

குறு, சிறு, நடுத்தர தொழில் மேற்கொண்டு வரும் தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை விரிவுப்படுத்தும் வகையில் கடன் பெறுவதற்கான வழிகள் எளிதானதாக மாற்ற வேண்டுமென்றும், எளிய முறையில் விரைந்து தொழில் செய்வதற்கான புதிய நடவடிக்கைகளையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். \

இதே போல மாத ஊதியம் பெற்று வரும் தனிநபர்கள், நடுத்தர வர்க்க குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மேலும், விவசாயம், சுற்றுலா, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது சார்ந்தும் மக்களின் எதிர்பார்ப்பு உள்ளது. இதே போல தமிழகம் உட்பட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இந்த பட்ஜெட் சார்ந்து தங்களது எதிர்பார்ப்பை ஏற்கெனவே தெரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE