சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கு விற்பனையானது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், மீண்டும் கடந்த ஆண்டு படிப்படியாக உயர்ந்து டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரத்தை எட்டியது.
பின்னர், மீண்டும் தங்கம் விலை படிப்படியாக அதிகரித்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி ஒரு பவுன் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 19-ம் தேதி ரூ.55,120 ஆகவும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக ஒரு பவுன் ரூ.54 ஆயிரம் என்று விற்பனையாகி வந்த நிலையில், மீண்டும் உயர தொடங்கி உள்ளது. இதன்படி, ஆபரணத் தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.6,920-க்கும், பவுனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360-க்கும் விற்பனையானது.
» தஞ்சாவூர் அருகே பரிதாபம்: பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் வேன் மோதி உயிரிழப்பு
» ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர்: அமைச்சரவை மாற்றத்துக்கு வாய்ப்பு
24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.59,120-க்கு விற்பனையானது. மீண்டும் அதிரடியாக விலை அதிகரித்திருப்பதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.100.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,500 ஆக உள்ளது.