சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலைகிலோ ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. சிறிய விற்பனைகடைகளில் ரூ.75 முதல் ரூ.90 வரை தரத்துக்கேற்ப விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதமாக நிலவிய கடும்வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.70 வரை உயர்ந்தது.பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது வரத்துகுறைந்து மீண்டும் ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை, தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, தற்போதுகர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. அப்பகுதி மக்களின் தக்காளி தேவையையும், தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில சந்தைகள் பூர்த்தி செய்கின்றன. இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது என்றார்.