பணவீக்கத்தால் இந்திய வீடுகளில் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு: CRISIL தகவல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பணவீக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்திய வீடுகளில் உணவு சமைக்க ஆகும் செலவு சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) தெரிவித்துள்ளது. இதற்கு காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளி, வெங்காயம், பூண்டு, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை உயர்ந்த காரணத்தால் பெரும்பாலான நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களில் காய்கறிகள் வாங்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சாம்பார் போன்ற உணவுகளை சமைப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு காய்கறிகள் இல்லாத உணவுகளை வீட்டில் சமைப்பது அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு பழங்களின் விலையும் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பண்டிகை நாட்களில் மட்டுமே அனைத்து வகை பழங்களையும் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். மற்ற நாட்களில் வாழைப்பழம் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் காய் மற்றும் கனி வாங்குவதற்காக செலவிடும் மாதாந்திர பட்ஜெட்டும் ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வின் காரணமாக உணவகங்களில் தக்காளி சாஸ் (ப்யூரி) கொண்டு உணவு தயாரிப்பதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது. அதே போல சாலடில் வெங்காயத்துக்கு பதிலாக வெள்ளரியை அதிகம் சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை கூடினாலும் உணவு விலையை அதிகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE