உள்நாட்டு விமான சேவை மே மாதத்தில் 4.4% உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை நடப்பாண்டு மே மாதத்தில் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள உள்நாட்டு விமானங்கள் மூலம் கடந்த மே மாதம் மட்டும் 1 கோடியே 37 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டில் 1 கோடியே 32 லட்சம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

நடப்பாண்டில் ஜனவரி தொடங்கி மே மாதம் வரை கணக்கிட்டால் 6 கோடியே 61 லட்சத்து 42 ஆயிரம் பயணிகள் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6 கோடியே 36 லட்சத்து 7 ஆயிரம் பேர் மட்டுமே வான்வழி போக்குவரத்தை இந்தியாவில் உபயோகித்துள்ளனர்.

ஆக மொத்தம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆண்டுக்கு சராசரியாக 3.99%, மே மாதத்தில் 4.4% உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இதில் நேரம் தவறாமல் விமான சேவை நடத்திவரும் நிறுவனங்களின் பட்டியலில் ஆகாசா ஏர்நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஏர்இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை வரிசைப்படி பிடித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE