சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விவொர்க் நிறுவனம், பல்வேறு நாடுகளில் பணியிடங்களுக்கான வசதியை வழங்கி வருகிறது. தனிநபர்கள் முதல் சிறிய, பெரிய நிறுவனங்கள் வரையில், தங்கள் அலுவலமாக விவொர்க் கட்டிடங்களைப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு விவொர்க் நிறுவனம் களம் இறங்கியது. பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத் என 8 நகரங்களில் விவொர்க் இந்தியா செயல்பட்டு வந்தது. தற்போது அதன் 55-வது கட்டிடத்தை சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஒலிம்பியா சைபர்ஸ்பேஸில் திறந்துள்ளது. இது சென்னையில் அதன் முதல் பணியிடக் கட்டிடமாகும்.
இது குறித்து விவொர்க் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ கரண் விர்வாணி கூறுகையில், “சென்னையில் புதிய நிறுவனங் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பணியிட வசதியை வழங்கும் நோக்கில் சென்னையில் எங்கள் முதல் கட்டிடத்தைத் திறந்துள்ளோம். இங்கு 2,000 இருக்கைகள் உள்ளன.
சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் இங்கு தங்கள் அலுவலகங்களை அமைத்துக் கொள்ள முடியும். நிறுவனங்கள் மட்டுமல்ல, தனிநபர்களும் தேவையான நாட்களுக்கு மட்டும் இங்கு வந்து தங்கள் அலுவலக வேலையை செய்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.