மாணவர்களின் விசா தேவையை அதிகளவில் பூர்த்தி செய்த அமெரிக்க தூதரகம் @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: எட்டாவது ஆண்டு மாணவர் விசா தினத்தன்று (ஜூன் 13) இந்தியாவில் உள்ள அமெரிக்க‌ தூதரகப் பணியாளர்கள், 3900 மாணவர் விசா விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தனர்.

'விண்ணப்பதாரர்களுடன் தூதரக மற்றும் எஜுகேஷன் யூஎஸ்ஏ (EducationUSA) ஊழியர்கள் உரையாடி அமெரிக்க கல்வி குறித்த தகவல்களை பகிர்தல்' உள்ளிட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே தொடர்ந்து வளர்ந்து வரும் கல்வி உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்க தூதரகம் வெளிப்படுத்தியது.

இந்திய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த‌ தூதர் எரிக் கார்செட்டி, “அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள ஒவ்வொரு சர்வதேச மாணவரும் சாதனையாளர் ஆவார். கல்வியில் சிறந்து விளங்குவதற்கான பல வருட கடின‌ உழைப்பை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இதற்கு முன் அமெரிக்காவுக்கு சென்ற மாணவர்களை போன்றே இன்றைய இந்திய மாணவர்களும் மிகப் பெரும் ஆற்றல் வளத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

நீங்கள் பெறும் கல்விய‌றிவு, புதிய திறன்கள் மற்றும் வாய்ப்புகள், மேலும் நீங்கள் உருவாக்கும் உறவுகள் உங்கள் கல்வி முதலீட்டுக்கு தகுந்தவையே ஆகும். ஒவ்வொரு மாணவரும் இந்தியாவின் தூதுவர். நாம் ஒன்றிணைந்து அமெரிக்க - இந்திய உறவை முன்னோக்கிக் கொண்டு செல்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

தூதரக விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசகர் ரஸல் ப்ரௌன் கூறுகையில், “அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்களின் மிகப் பெரும் பிரிவினராக இந்திய மாணவர்கள் இந்த ஆண்டு உருவெடுக்கும் நிலை இருப்பதால், மாணவர் விசா விண்ணப்பதாரர்களை வரவேற்க வெளியுறவுத்துறையும் எஜுகேஷன் யூஎஸ்ஏ பணியாளர்களும் உற்சாகமாக உள்ளனர்,” என்று குறிப்பிட்டார்.

கல்விக்காக அமெரிக்காவை தேர்ந்தெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த மாணவர் விசாக்களை விட அதிக மாணவர் விசாக்களை 2023-ம் ஆண்டில் இந்தியாவுக்கான‌ அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது.

2021 மற்றும் 2023-க்கு இடையில் மற்ற அனைத்து வகை விசாக்களுக்கான தேவை 400 சதவீத உயர்வைச் சந்தித்தபோதும், மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அவர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கும் அமெரிக்க அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை முன்னெப்போதும் கண்டிராத இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிற‌து.

இந்தியாவில் இருந்து மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவ‌தால், வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய 2024-ம் ஆண்டிற்கான மாணவர் விசா பருவத்தை இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் துணைத் தூதரகங்களும் விரிவுப்படுத்தியுள்ளன.

இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி இலக்காக அமெரிக்காவே முதலிடத்தில் உள்ளது. மற்ற இடங்களைக் காட்டிலும் அமெரிக்கக் கல்வியையே 69 சதவீத இந்திய மாணவர்கள் விரும்புவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவில் உள்ள சர்வதேச பட்டதாரி மாணவர்களின் மிகப் பெரும் பிரிவாக ஏற்கனவே திகழும் இந்திய மாணவர்கள், வேலைவாய்ப்பு அடிப்படையிலான அமெரிக்க விசாக்களைப் பெற்றோ அல்லது இந்தியாவில் தங்கள் துறைகளில் தலைவர்களாக உருவெடுத்தோ, மதிப்புமிக்க உலக அனுபவத்தைத் தொடர்ந்து பெறுகிறார்கள். அமெரிக்கக் கல்வியின் வாழ்நாள் பயனை இது பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவுக்கு பயணிக்கத் தயாராகும் இந்திய மாணவர்கள் bit.ly/EdUSAIndiaPDO24 இணைப்பை பார்வையிடுவதன் மூலமும், அமெரிக்காவில் உயர்கல்விக்கான அதிகாரப்பூர்வத் தகவல் ஆதாரமான EducationUSA நடத்தும் புறப்பாட்டிற்கு முன்பான பயிலரங்கில் (PDO) இணைவதன் மூலமும் மாணவர் விசா செயல்முறையைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE