தேர்தல் முடிவுகள் எதிரொலி: சென்செக்ஸ் 6000+ புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம் வெளியாகி வரும் சூழலில், இந்திய பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணிக்கு இடையே நிலவும் போட்டிதான் இதற்கு காரணம் என தெரிகிறது.

தேர்தல் முடிவுகள் சார்ந்த முன்னிலை நிலவரம் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருவதை காட்டுகிறது. இதன் எதிரொலியாக பங்கு வர்த்தகம் சார்ந்த வணிகம் அதிர்வலைகளை எதிர்கொண்டுள்ளது.

அதன் விளைவாக சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவை கண்டுள்ளது. காலை 76,468 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி 70,882 புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்துள்ளது. நிஃப்டி 50 என்பது 1,400 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. இன்று காலை 23,263 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி 50 தற்போது 21,801 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. சுமார் 6.05 சதவீதம் புள்ளிகள் சரிந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெல்லும் என்றும் சொல்லப்பட்டது இருந்தது. அதன் காரணமாக திங்கட்கிழமை அன்று பங்கு வர்த்தகம் உச்சத்தை எட்டி இருந்தது.

ஆனால், தற்போது வெளியாகி வரும் தேர்தல் முன்னிலை நிலவரத்தின்படி பாஜக கூட்டணி 292 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்செக்ஸ், நிஃப்டி கடந்த 2020-ம் ஆண்டின் மே மாதத்துக்கு பிறகு மிக மோசமான சரிவை கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE