இதுவரையில் இல்லாத அளவில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இதுவரையில் இல்லாத அளவில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 2023-24 நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட்டாக ரூ.2.11 லட்சம் கோடி வழங்க ஒப்புதல் தெரிவித் துள்ளது.

இது முந்தைய நிதி ஆண்டு வழங்கப்பட்ட டிவிடெண்ட் உடன்ஒப்பிடும்போது 140% அதிகம்ஆகும். 2022-23 நிதி ஆண்டில் ரிசர்வ்வங்கி மத்திய அரசுக்கு ரூ.87,416 கோடி டிவிடெண்ட் வழங்கியது.

உபரி நிதி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆர்பிஐ இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

“இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், 2023-24 நிதி ஆண்டுக்கான சிஆர்பி ஒதுக்கீட்டை 6.50 சதவீதமாக உயர்த்த ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி, மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று ரிசர்வ் வங்கி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு எதிர்பார்த்த டிவிடெண்டை விட இது அதிகம் ஆகும். சிஆர்பி என்பது அவசர காலத்தில் நிலைமையை சமாளிப் பதெற்கென்று ஒதுக்கப்படும் நிதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் ரிசர்வ் வங்கி இந்த அவசரகால ஆபத்து தணிப்பு (சிஆர்பி) நிதியை பராமரிக்கும். அந்த நிதி ஆண்டு முடிந்த பிறகு உபரியாக இருக்கும் நிதியை மத்திய அரசுக்கு வழங்கும். இது உபரி நிதி அல்லது டிவிடெண்ட் என்று அழைக்கப்படுகிறது.

சிஆர்பி உயர்வு: கரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 2018 -19 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில்க் ரிசர்வ் வங்கியின் சிஆர்பி 5.50 சதவீதமாக இருந்தது. 2022 - 23 நிதி ஆண்டில் பொருளாதாரம் மேம்படத் தொடங்கிய நிலையில் சிஆர்பி 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அது 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE