மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டிய தங்கம்: நகை வாங்குவோர் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் பவுன் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022-ம்ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது.

மீண்டும் கடந்த ஆண்டு படிப்படியாக உயர்ந்து டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது.

பின்னர், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 19-ம் தேதி ரூ.55,120-க்கும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது. அதைத்தொடர்ந்து தங்கம் விலை குறையத் தொடங்கியது.

இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.6,900-க்கும் பவுனுக்கு ரூ.400அதிகரித்து ரூ.55,200-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.58,960-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் அதிகரிப்பு: வெள்ளி விலையும் அதிகரித்து,நேற்று ஒரு கிராம் ரூ.101-க்குவிற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,00,100 ஆக உள்ளது.

தங்கம் விலை உயர்வு குறித்துநகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், தங்கத்தில் முதலீடு செய்வதும் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால் தங்கம்விலை அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது, நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE