மின்சார வாகனங்களுக்கான சலுகைகள், சார்ஜிங் மையங்கள் குறித்த விவரங்கள் செயலி மூலம் அறிமுகம் செய்ய திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், சார்ஜிங் மையங்கள் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார வாகனங்களை மக்களும் தற்போது அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். நாட்டில் மின்சார வாகனங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை சார்ஜிங் செய்வதற்காக சிலபெட்ரோல் பங்க்குகள், சென்ட்ரல்ரயில் நிலையம் உள்ளிட்ட சிலமுக்கிய இடங்களில் சார்ஜிங்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மையங்கள் எங்கு உள்ளன என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை.

இதனால், மின்சார வாகனங்களை பயன்படுத்தும் பலர் தாங்கள் செல்லும் வழியில் சார்ஜிங்மையம் இருக்குமா என்ற அச்சம் காரணமாக வெளியூர்களுக்கு வாகனங்களை ஓட்டிச் செல்ல தயங்குகின்றனர்.

இதையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக சார்ஜிங் மையங்கள் உள்ள இடங்கள், மின்சார வாகனங்கள் வாங்க மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் சலுகைகள், எந்தெந்த நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கின்றன, டீலர்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஒரே தளத்தில் தெரிந்து கொள்ள வசதியாக, மின்சார வாகன இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி அடுத்த மாதம் தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் மூலம், மின்சார வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வீட்டில் இருந்து எங்கு செல்கின்றனரோ அந்த இடங்களில் உள்ள சார்ஜிங் மையங்கள், மின்சார வாகனத்தின் பயன் உள்ளிட்ட விவரங்களை அறியலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE