அட்சய திருதியை தினத்தில் தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: பொதுமக்கள் நகையை வாங்கிக் குவித்தனர்

By செய்திப்பிரிவு

சென்னை: அட்சய திருதியை தினத்தில், தமிழகம் முழுவதும் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. விலை அதிகரித்தபோதும் பொதுமக்கள் நகைகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் (10-ம் தேதி) காலை 6.33 மணிக்குத் தொடங்கி நேற்று (11-ம் தேதி) அதிகாலை 4.56 மணி வரை நீடித்தது.

இந்த தினத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தன. அதேநேரம், அட்சய திருதியை நாளில் தங்கம் விலை 3 முறை உயர்ந்து நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி அளித்தது. அன்றைய தினம் ஒரு பவுன் ரூ.1,240 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்பனையானது. நகை விற்பனை நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நீடித்தது. விலை அதிகரித்தபோதும், விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடை உள்ள தங்க நகைகள் விற்பனையானது.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: அட்சய திருதியை தினத்தன்று ஒரே நாளில் 3 முறை தங்கம் விலை உயர்ந்தது. விலை உயர்ந்தபோதும், தங்கம் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு அட்சய திருதி தினத்தன்று ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான 24 ஆயிரம் கிலோ எடையுள்ள தங்கம் தமிழகம் முழுவதும் விற்பனை ஆகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும், சில நகைக் கடைகள் அட்சய திருதியை சலுகையை இன்று (12-ம் தேதி) வரை நீட்டித்துள்ளன.

அட்சய திருதியை முன்னிட்டு, பல்வேறு நகைக் கடைகள் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியும், வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலும், வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரையும் தள்ளுபடி வழங்கின. சில கடைகள் நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கின. அத்துடன், புதிய டிசைன்களில் நகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எடை குறைவான நெக்லஸ், ஃபேன்சி வளையல், கம்மல், மோதிரம், டாலர் செயின் ஆகியவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

அட்சய திருதியை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கே நகைக் கடைகள் திறக்கப்பட்டன. பெண்கள் தங்களுக்கு பிடித்த டிசைன் நகைகளை வாங்கினர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் நகைக் கடைகள் உள்ளன.

பொதுமக்கள் சிலர் வெயிலுக்கு அஞ்சி காலையிலேயே நகை வாங்க கடைகளில் குவிந்தனர். சிலர் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிற்பகலிலும் நகைக் கடைகளுக்கு படையெடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE