கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் வரத்து குறைவால் அதன் விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து காய் கறிகள் வரத்து குறைந்து விலை சற்று உயர்ந்துள்ளது. பீன்ஸ் வரத்து கடுமையாக குறைந்து விட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. இது நேற்று ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அவரைக்காயும் வரத்து குறைந்து, அதன் விலை கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு காய் கறி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கோடை வெப்பம் காரணமாக எப்போதும் கிலோ ரூ.10-க்குள் விற்கப்படும் முட்டைக் கோஸ் ரூ.14 ஆகவும், முள்ளங்கி ரூ.25 ஆகவும் உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வந்த முருங்கைக் காய் ரூ.15 ஆக சரிந்துள்ளது. கோடை காலம் வந்தாலே தக்காளி விலை கடுமையாக உயரும். ஆனால் இந்த ஆண்டு தக்காளி விலை உயரவில்லை. போதுமான அளவு வந்து கொண்டிருக்கிறது. கிலோ ரூ.21 வரை விற்கப்பட்டு வருகிறது.

மற்ற காய்கறிகளான வெண்டைக்காய் ரூ.35, பச்சை மிளகாய், புடலங்காய், சாம்பார் வெங்காயம் தலை ரூ.30, நூக்கல் ரூ.25, உருளைக் கிழங்கு ரூ. 22, பீட்ரூட், பாகற்காய், கத்தரிக்காய் தலா ரூ.20, வெங்காயம் ரூ.18, முருங்கைக் காய், கருணைக்கிழங்கு, மாங்காய்தலா ரூ.15, கேரட் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் காய்கறி விலை சற்று குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE