வெப்ப அலை, அனல் காற்றால் ‘ஏசி’ விற்பனை 100% அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், ‘ஏசி’ (ஏர் கண்டிஷன்) விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ஏசி இயந்திரம் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு வெப்ப அலை மற்றும் அனல் காற்று அபாய எச்சரிக்கை ( ஆரஞ்ச் அலர்ட் ) விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம், வெப்ப அலை அதிகரித்த வண்ணம் உள்ளதால், பொதுமக்கள் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என அரசும் அறிவுறுத்தி உள்ளது.

மின் தேவை அதிகரிப்பு: வெயிலின் தாக்கத்தால் மக்கள் தங்களது வீடுகளில் ஏசி இயந்திரங்களைப் பொருத்துவது அதிகரித்து வருகிறது. அதனால் கடந்தாண்டுகளை விட இந்தாண்டு ஏசி இயந்திரங்களின் விற்பனை 100 சதவீதம் கூடுதலாகி உள்ளது, என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால் மின் நுகர்வும், மின் தேவையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மதுரையில் உள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விற்பனை மையங் களின் மூத்த பொது மேலாளர் வி.சுதாகர் கூறியதாவது:

கடந்தாண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு ஏசி இயந்திரங்கள் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது. வீட்டில் ஒரு படுக்கையறையில் மட்டுமே ஏசி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வீட்டிலுள்ள அனைத்து படுக்கையறைகள் மற்றும் ஹால்களிலும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக வெயில் குறைவாகவும், இதமான வெப்பநிலை நிலவும் கம்பம், சின்னமனூர், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பநிலை அதிகாிப்பால் ஏசி இயந்திரங்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.

போதிய உற்பத்தி இல்லை: மதுரை மாநகரில் எங்களது கிளையில் கோடைகாலத்தில் முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 ஏசி இயந்திரங்கள் விற்பனையாகும். தற்போது 125 ஏசி இயந்திரங்கள் விற்பனையாகின்றன. அதனால் அனைத்து நிறுவன ஏசி இயந்திரங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சந்தையின் தேவைக்கேற்ப ஏசி இயந்திரங்களை நிறுவனங்களால் உற்பத்தி செய்து தர முடியவில்லை. அதனால் படிப்படியாக உற்பத்தி செய்த பின்னரே வழங்குகின்றனர், என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE