பிரம்மோஸ் ஏவுகணை 4-ம் தொகுப்பு: பிலிப்பைன்ஸுக்கு வழங்கியது இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 3 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், நேற்று 4-வது தொகுப்பு ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்தது.

பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் அதை ஏவுவதற்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக இந்தியா - பிலிப்பைன்ஸ் இடையே 2022-ம் ஆண்டில் 375 மில்லியன் டாலர் மதிப்பில் ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்திய விமானப்படையின் சி-17 சரக்கு விமானம் மூலம் இந்த ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது. நேற்று கடைசி பேட்ஜ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியா - ரஷ்யா இணைந்து பிரம்மோஸ் ஏவுகணையை தயாரிக்கின்றன. தரைப்பகுதி, போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்களில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும். இந்த ஏவுகணை ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப்பாய்ந்து 290 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.

அர்ஜென்டினா உட்பட இன்னும் சில நாடுகளும் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE