யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன்

By செய்திப்பிரிவு

மும்பை: வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

வங்கி மோசடி, பண மோசடி வழக்கில் யெஸ் வங்கியின் இணை நிறுவனரான ராணா கபூர் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். யெஸ் வங்கியில் மேற்கொள்ளப்பட்ட நிதி முறைகேடுகள் தொடர்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ரூ. 466.51 கோடி அளவுக்கு ராணா கபூர், வங்கி மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வழக்குகளில் இருந்தும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீன் நடைமுறைகளை விரைவில் முடிக்க முயற்சிப்பதாக கபூரின் வழக்கறிஞர் ராகுல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கிரிமினல் சதி, கிரிமினல் நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் மற்றும் ரூ. 466.51 கோடி பொதுப் பணத்தை திருப்பியதாக ராணா கபூர், அவந்தா குழுமத்தின் விளம்பரதாரர் கவுதம் தாபர் ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ராணா கபூருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE