தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ. 51,640-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.51,640-க்குவிற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம்ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர்மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.44 ஆயிரமும், மார்ச் மாதம் பவுன் ரூ.45 ஆயிரம், ஜுன் மாதம் பவுன் ரூ.46 ஆயிரமும், டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரமாகவும் உயர்ந்தது. அதன் பிறகு ஏற்ற இறக்கமாக இருந்துவந்தது.

பின்னர், மீண்டும் விலை அதிகரித்து, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்துக்கும், கடந்த மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரமும், 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரமும், 29-ம் தேதி ரூ.51 ஆயிரமாகவும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலைமீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.85அதிகரித்து ரூ.6,455-க்கும்பவுனுக்கு ரூ.680 அதிகரித்துரூ.51,640-க்கும் விற்கிறது.

இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.54,040-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.81.60-க்குவிற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.81,600 ஆக உள்ளது.

இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவைஅதிகரித்துள்ளது. அத்துடன், பங்குச் சந்தைகளிலும் அதிகளவில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இத்தகைய காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE