புதிய உச்சம் தொட்ட தங்கம்: பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.50,000 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இவ்வாறு விலை மிகுதியாக அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை கவலையடையச் செய் துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்த தங்கம் விலை, அக். 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்ததங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச. 4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் தொடர்ச்சியாக தங்கம் விலைஉயர்ந்து வருகிறது. இதன் பகுதியாக நேற்று பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரம் என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,250-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.53,760-க்கு விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 30 பைசாஅதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.300 அதிகரித்து, ரூ.80,500-க்கும் விற்பனையானது.

இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:

பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீக்கம், சர்வதேசஅளவில் தங்கத்தின் தேவை, தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் கவனம் அதிகரித்தல் என்பன உள்ளிட்ட காரணங்களால் வரலாறு காணாத வகையில் தங்கத் தின் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் தொடர்ந்து விலை அதிகரித்து, நடப்பாண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.60 ஆயி ரத்தை எட்டக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE