சென்னை: விரைவு பேருந்துகளின் இருக்கைகளை 60 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யலாம் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.