ரூ.200 கோடி கடன் பத்திரம்: இண்டெல் மணி வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: இண்டெல் மணி நிறுவனம் ரூ.200 கோடி திரட்டுவதற்காக கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.

தங்கக் கடன் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான இண்டெல் மணி, தலா ரூ.1,000 முகமதிப்புள்ள பாதுகாப்பான, மாற்ற இயலாத கடன் பத்திரங்களின் (என்சிடி) 4-வது வெளியீட்டை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ல் தொடங்கிய இந்த வெளியீடு, வரும் 12-ம் தேதி முடிவடைய உள்ளது. ஒரு என்சிடியின் முகமதிப்புரூ.1,000. குறைந்தபட்ச முதலீட்டு அளவு 10 என்சிடிகள் (ரூ.10,000) ஆகும். கூப்பன் மூலம் ஆண்டுக்கு அதிகபட்சம் 12.25% வரை வட்டியைப் பெறலாம். 72 மாதங்களில் முதலீடு இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து இண்டெல் மணி செயல் இயக்குநர் உமேஷ் மோகனன் கூறும்போது, “இந்த கடன் பத்திர வெளியீடு மூலம் மொத்தம் ரூ.200 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம். விவ்ரோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இந்த வெளியீட்டின் முதன்மை மேலாளராகச் செயல்படும்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது, கடன் வழங்குதல், நிதியளித்தல், நிறுவனத்தின் அசல், வட்டியை திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும். வரும் 2025 நிதியாண்டுக்குள் 12 மாநிலங்களில் உள்ள 425 கிளைகள் மூலம் புவியியல் தடத்தை விரிவுபடுத்த விரும்புகிறோம். இது இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களுக்கும் விரிவடையும்.

தென் மாநிலங்களில் எங்களின் முதன்மையான வியூக மையமாக தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. நடப்பு 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் எங்கள் நிறுவனத்தின் லாபம் சாதனை அளவாக 568.86% அதிகரித்தது. நாங்கள் ஏற்கெனவே 3 கடன் பத்திர வெளியீடுகள் மூலம் ரூ.260 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி உள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE