புதுடெல்லி: இந்தியா இப்போது உலகின் 5-வதுபெரிய பொருளாதார நாடாக உள்ளது. 2027-ம் ஆண்டு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்டு 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் 2031-ல் இந்தியாவின் பொருளாதாரம் 7 டிரில்லியன் டாலராக உயரும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், 2024 முதல் 2031 வரையில் ஆண்டுக்கு சராசரியாக 6.7 சதவீதம் வளர்ச்சி காணும் என்று கிரிஸில் தெரிவித்துள்ளது. இதற்கு அரசின் மூலதன முதலீடு முக்கியக் காரணியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவுக்கு உள்ளானது. ஆனால், இந்தசரிவிலிருந்து இந்தியா விரைவிலேயே மீண்டெழுந்தது. ரஷ்யா - உக்ரைன் போர், விநியோகச் சங்கிலி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டது. எனினும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில், தற்போது காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் நீடித்துவருகிற நிலையில் கச்சா எண்ணெய், சரக்குப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தச் சூழலை இந்தியா கவனமாக கையாள வேண்டும் என்று கிரிஸில் தெரிவித்துள்ளது.