2023-ல் இதுவரை இல்லாத வகையில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆனது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது. விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-ம் ஆண்டில் உள்நாட்டில் உள்ள நகரங்களுக்கு விமானத்தில் பயணித்தோர் எண்ணிக்கை 15.2 கோடி ஆக அதிகரித்துள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர எண்ணிக்கை ஆகும். கரோனா பாதிப்புக்கு முன்பு 2019-ம் ஆண்டு உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.4 கோடி ஆக இருந்தது.

கடந்த 2020-ல் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமான சேவையும் 2 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் விமான பயணிகள் எண்ணிக்கை 6.3 கோடியாக குறைந்தது. பின்னர் 2021-ல் 8.4 கோடி, 2022-ல் 12.3 கோடி என படிப்படியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023-ல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 60.5 சதவீதத்துடன் இண்டிகோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர் இந்தியா (9.7%), விஸ்தாரா (9.1%), ஏஐஎக்ஸ் கனெக்ட் (7.2%) ஆகிய 3 நிறுவனங்களை உள்ளடக்கிய டாடா குழுமம் 26 சதவீதத்துடன் 2-ம் இடம் பிடித்தன. ஸ்பைஸ்ஜெட் 5.5%, ஆகாசா ஏர் 4.1%, பிற நிறுவனங்கள் 3.9% பங்கு வகித்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE