நீலகிரியில் மல்லிகை கிலோ ரூ.3,500-க்கு விற்பனை @ பொங்கல் பண்டிகை

By செய்திப்பிரிவு

உதகை / திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், வரத்து குறைந்ததால் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை, இன்று ( ஜன.15 ) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கான பொருட்களை கடந்த 2 நாட்களாக பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். அதன்படி, கரும்பு, மண் பானை, மஞ்சள் கொத்து, பூளைப் பூ, ஆவாரம்பூ, பனங் கிழங்கு, அரிசி, வெல்லம், காய்க றிகள், பழங்கள் மற்றும் கலர் கோலப்பொடி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். உதகை, குன்னூர் சந்தைகள் மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் பொங்கல் பொருட்கள் விற்பனை சிறப்பாக இருந்தது.

பனி காரணமாக, சத்தியமங்கலம், காரமடை மற்றும் கோவை பூ மார்க்கெட்டில் இருந்து உதகைக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால், நேற்று மல்லிகை கிலோ ரூ.3500, சாமந்தி ரூ.180 கோழிக்கொண்டை ரூ.160, துளசி ரூ.80 என சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப் பட்டது. இதேபோல், அரளி பூ ரூ.300, காக்கடா ரூ.1000, பட்டன் ரோஜா ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது. பனி பாதிப்பால் முல்லைப் பூ வரத்து இல்லாமல் போய்விட்டது.

இதேபோல், தரமான கரும்பு ஒரு ஜோடி ரூ.150 முதல் ரூ.200 வரையும், மஞ்சள் கொத்து ஜோடி ரூ.60 முதல் ரூ.80 வரையும், ஒரு கட்டு பொங்கல் பூ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உதகைக்கு கொண்டுவரப்பட்ட பொங்கல் பானைகள் தரம் வாரியாக ரூ.250 முதல் ரூ. 800 வரை விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக, இந்த முறை அதிக மழை காரணமாக மண் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பானைகள் விலை கடந்தாண்டை விட சற்று அதிகரித்திருந்தது.

வண்ண, வண்ண கோலப் பொடிகள் வாங்குவதற்கும் இளம் பெண்கள் ஆர்வம் காட்டினர். உழவர் சந்தையில் நேற்று காலை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. உதகையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.80, கொய்யா ரூ.80, ஆப்பிள் ரூ.160, மாதுளை ரூ.170, சாத்துக்குடி ரூ.90, கருப்பு பன்னீர் திராட்சை ரூ.100, கதலி, பூவன் ரூ.80, செவ்வாழை ரூ. 90 கற்பூரவள்ளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் கமர்சியல் சாலை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் இருந்த பூஜை பொருட்கள் விற்பனை கடையில் சுவாமி படங்கள் மற்றும் பூஜை பொருட்களை மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். மெயின் பஜார் மற்றும் கமர்சியல் வீதிகளிலுள்ள ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர். வேட்டி - சேலை விற்பனை அதிகளவில் இருந்தது.

திருப்பூரில் பூக்கள் விலை உயர்வு: திருப்பூர் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் பூக்கள் வாங்க திரண்டனர். நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.2,400-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.400 உயர்ந்து, ரூ.2,800-க்கு விற்பனையானது. முல்லை ரூ.1600, கனகாம்பரம் ரூ.2,000, ஜாதி மல்லி ரூ.1600, சம்பங்கி ரூ.160, செவ்வந்தி ரூ.160, அரளி ரூ.250-க்கும் விற்பனையாகின. இதேபோல வண்ண கோலப் பொடிகளின் விற்பனையும், மண் பானைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE