இந்திய பணக்காரர்களில் கவுதம் அதானி முதலிடம்: முகேஷ் அம்பானியை முந்தினார்!

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானியை முந்தியுள்ளார் கவுதம் அதானி. இது குறித்த தகவலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அவர் 12-வது இடத்தில் உள்ளார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 61 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் அதில் பின்னடவை எதிர்கொண்டார்.

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ‘இதை விசாரிக்க சிறப்புக் குழுக்கள் தேவை இல்லை. செபி அமைப்பே விசாரிக்கும்’ என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. வாய்மை வென்றதாக கவுதம் அதானி கருத்து தெரிவித்தார்.

இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் முகேஷ் அம்பானியை அவர் முந்தியுள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலர்கள். முதல் இடத்தில் 220 பில்லியன் டாலர்களுடன் எலான் மஸ்க் உள்ளார். உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE