ஹிண்டன்பர்க் சர்ச்சை | உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்பு: ‘வாய்மையே வெல்லும்’ எனக் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்றும், செபி அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள கவுதம் அதானி, வாய்மையே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும். எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கான எங்களின் பணிவான பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, "ஹிண்டன்பர்க் அறிக்கை ஒரு வருடத்துக்கு முன்பு வெளியானது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். மக்கள் மத்தியிலும் இது மிக முக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. அந்த வகையில், இது மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கு. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் செபி இந்த வழக்கை முடிக்கவில்லை. தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இது போன்ற உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில், விசாரணையை முடிக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்றால், செபியின் அணுகுமுறை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

செபி நினைத்திருந்தால், இந்த விசாரணையை நீண்ட காலத்துக்கு முன்பே முடித்திருக்க முடியும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் நிதி நிலைக்குழுவிலும் நாங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பினோம். இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என செபிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. எனவே, அந்த கால வரம்புக்குள் விசாரணையை செபி நிறைவு செய்யும் என நம்புவோம். ஆனால், செபியின் கடந்தகாலத்தை வைத்து சொல்வதாக இருந்தால், 3 மாதங்களுக்குள் அது விசாரணையை நிறைவு செய்யாது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE