சத்தியமங்கலம் மலர் சந்தையில் மல்லிகை பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ஈரோடு: சத்தியமங்கலம் மலர் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக, மல்லிகை விலை கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம் பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கடா, சாதிமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்திய மங்கலத்தில் செயல்படும் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மலர் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சந்தையில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு, தும் கூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் அதிகரிக்கும் பனிப் பொழிவால் பூக்கள் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சத்தியமங்கலம் மலர் சந்தையில், மல்லிகை விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் மலர் சந்தையில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி மல்லிகை கிலோ ரூ.1,300-க்கும், 24-ம் தேதியன்று கிலோ ரூ.1,600-க்கும் விற்பனையானது.

நேற்று வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டதால், கிலோ ரூ.1,080-க்கு விற்பனையானது. அதேபோல், நேற்று முல்லை கிலோ ரூ.810-க்கும், சாதி முல்லை ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், காக்கடா கிலோ ரூ.600-க்கும் விற்பனையானது.

இது குறித்து சத்தி மலர் சாகுபடி விவசாயிகள் தலைமை சங்கத்தின் துணைதலைவர் கே.ஜெகதீசன் கூறியதாவது: சத்தி மலர் சந்தையில் 1,400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு மேற்கொண்டு, பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். சராசரியாக மலர் சந்தைக்கு 5 டன் வரை மல்லிகை பூவும், முல்லை 2 டன் வரையிலும் வரத்து இருக்கும்.

தற்போது பனிப் பொழிவு மற்றும் மழை உள்ளிட்ட காரணங்களால், 1 டன் அளவுக்குத்தான் மல்லிகை வரத்து உள்ளது. முல்லை மற்றும் கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், மல்லிகை விலை கடந்த 4 நாட்களாக கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.

சத்தி மலர் சந்தையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு அதிக அளவில் மலர்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இத்துடன், மும்பை மற்றும் டெல்லிக்கு, கோவையில் இருந்து விமானம் மூலம் 100 பெட்டிகள் வரை ( 1,000 கிலோ ) மல்லிகை அனுப்பி வருகிறோம். பூக்களின் விலை குறையும் போது, மேட்டுப் பாளையம், காரமடை, மூணாறு உள்ளிட்ட இடங்களில் செயல்படும் நறுமணத் தொழிற்சாலைகளுக்கு மலர்களை அனுப்பி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE