அகமதாபாத்: அமெரிக்க குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோக கோலா, குஜராத்தில் ரூ.3,000 கோடிக்கு ஆலை அமைக்க உள்ளது. இந்த ஆலைக்காக 1.6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோக கோலா நிறுவனத்துக்கு குஜராத்தில் கோப்லெஜ் மற்றும் சன்ந்த் ஆகிய இரு பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு ஆலைகள் உள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் சனந்த்தில் மூன்றாவது ஆலை அமைக்க உள்ளது.
இந்த ஆலையில் பெருமளவில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. ஆலை உருவாக்கப் பணியில் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு 400 பேர் பணியமர்த்தப்படுவர் என்றும் இந்த ஆலையால் பல்வேறு, சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, குஜராத் தொழில் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் குப்தா கூறுகையில், “ கோக கோலா நிறுவனம் அகமதாபாத்திலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள சனந்த பகுதியில் ஆலை அமைக்க உள்ளது. இந்த ஆலைக்காக அந்நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது. இந்நிலையில் ஆலை அமைக்க அந்நிறுவனத்துக்கு குஜராத் அரசு 1.6 லட்சம் சதுர மீட்டர் நிலம் ஒதுக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.