கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சிறு, குறு தொழில்கள் கடும் பாதிப்பு: மார்க்சிஸ்ட்

By செய்திப்பிரிவு

சென்னை: மின் கட்டணத்தில் செய்துள்ள மாற்றங்களால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சிறு, குறு தொழில்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 - 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்டவைகளில் கணிசமான சிறு / குறுந்தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, துணி உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை சார்ந்த தொழில்களும், வார்ப்பட தொழில்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளால் இந்தப் பகுதி கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இப்பகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உள்நாட்டு நூல் உற்பத்தியாளர்களை பாதிக்கும் விதத்தில் குறிப்பாக, பஞ்சு ஏற்றுமதியின்போது உள்நாட்டு தேவையை கணக்கில் கொள்ளாமல் பெரும் கார்ப்ரேட் முதலாளிகளின் லாபத்தை மட்டுமே முதன்மையாக கொள்ளும் பன்னாட்டு நூல் இறக்குமதிக்கு கொடுத்துள்ள அனுமதியை விலக்கிக் கொள்ள வேண்டும்.

கழிவுப் பஞ்சை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்திட வழிவகுக்க வேண்டும். மேலும், ஏற்றுமதி தொழில்கள் மந்தமாகியிருப்பதால் டிராபேக் சதவீதத்தை உயர்த்திட வேண்டும். இப்பகுதியில் செயல்படும் தொழில்களுக்கு வங்கிக் கடன்களில் நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை மாநிலக் குழு வலியுறுத்துகிறது. ஒன்றிய ஆட்சியின் போக்கிற்கு மாற்றாக 'தமிழ்நாடு பருத்தி கழகம்' உருவாக்குவோம் என்ற முக்கியமான அறிவிப்பை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொண்டது. அதனை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்து நிவாரணமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றிய அரசின் நிர்பந்தம் காரணமாக தமிழ்நாட்டில் சிறு / குறு தொழில்களுக்கு மின் கட்டணத்தில் செய்துள்ள மாற்றங்கள் கடும் பாதிப்பை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து இந்த சுமை ஓரளவு குறைக்கப்பட்டிருந்தாலும், சிறு / குறு தொழில் நிறுவனங்களுக்கு நிலை கட்டணம், பீக் ஹவர் கட்டண உயர்வை ரத்து செய்திடுவதும், மேலும் சிறு குறு தொழில்களை பாதுகாக்கும் வகையில் முற்றாக நிவாரணம் அளிப்பதுடன் சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்று முறைகளை கையாள அரசு மானியம் மற்றும் கடன் உதவிகள் வழங்கிட வேண்டுமெனவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கோருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்