ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு - புதிய உச்சத்தில் தங்கம் விலை!

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.30) இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. போர்ச்சூழல், வட இந்தியாவில் தொடங்கி இருக்கும் திருமண சீசன் போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.50,720-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.82.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.82,200 ஆக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE