ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்ஜாலுக்கு சொந்தமான ரூ.25 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்ஜாலுக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரும் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. ஆசியா, ஆப்ரிக்கா உட்பட உலக அளவில் 40 நாடுகளுக்கு அந்நிறுவனம் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பாக 2022 மார்ச் மாதம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்குச் சொந்தமான 25 இடங்களில் வருமான வரித் துறை சோதனையில் ஈடுபட்டது.

இதன் தொடர்ச்சியாக, வருவாய் புலனாய்வு துறை வழங்கிய தகவலின் அடிப்படையில், அமலாக்கத் துறை பவன் முஞ்ஜால் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டுப் பணம் வைத்திருந்தது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத் துறை பவன் முஞ்ஜாலுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில், தற்போது அவருக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில், “2014 – 2019 வரையிலான காலகட்டத்தில் முஞ்ஜால் ரூ.54 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். இந்தப் பணம் முறைகேடாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு முஞ்ஜாலின் தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறை நடவடிக்கையால், நேற்று முன்தினம் பங்குச் சந்தை வர்த்தகத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2.08 சதவீதம் சரிந்து ரூ.3,108-க்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE