மானிய விலை கோதுமை மாவு; கிலோ ரூ.27.50-க்கு விற்பனை - மத்திய அரசு தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தீபாவளி கொண்டாடப்பட வுள்ளதையொட்டி மானிய விலையில் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50-க்கு விற்பனை செய்யப்படும்.

மக்களுக்கு அன்றாட தேவையாக விளங்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது "பாரத்" பிராண்ட் பெயரில் ஆட்டாவை சில்லறை விற்பனை சந்தையில் மலிவு விலையில் அதிகரிப்பதன் மூலம் கோதுமை போன்ற முக்கியமான உணவுப் பொருட்களின் விலையை படிப்படியாக குறைக்க முடியும் என்று மத்திய நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கோதுமைமாவு விற்பனைக்காக 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லி கடமைப் பாதையில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்), மத்திய அங்காடிகள், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு உள்ளிட்ட இடங்களில் இந்த மலிவு விலை ஆட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த திட்டம் கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE