30 பில்லியன் டாலர் முதலீடு - ஐபிஎல் பங்குகளை வாங்க விரும்பும் சவுதி இளவரசர்?

By செய்திப்பிரிவு

ரியாத்: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் பங்குகளை வாங்க சவுதி அரேபிய இளவரசர் விருப்பம் தெரிவித்துள்ளார் என ப்ளூம்பெர்க் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தான். 2008-ல் தொடங்கியதில் இருந்து இதுவரை 16 சீசன்களை கடந்துள்ள ஐபிஎல்லில், ஒவ்வொரு சீசனுக்கும் ரசிகர்களும் அதிகமாகி வருகின்றனர். அதன் மதிப்பும் அதிகமாகி வருகிறது. இதனிடையே, ஐபிஎல்லின் பல பில்லியன் டாலர் பங்குகளை வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விருப்பப்படி, அவரின் ஆலோசகர்கள் ஐபிஎல்லை 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியா வந்தபோதே அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட்டை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் வகையில், பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் பிசிசிஐ தரப்பில் இருந்து இதற்கு எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE