புதுடெல்லி: நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய கருவியாக ஜன்தன் திட்டம் மாறி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கவுடல்யா பொருளாதார மாநாடு 2023, புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சிக்கான மிகப் பெரிய கருவியாக ஜன்தன் யோஜனா திட்டம் மாறி இருக்கிறது. தற்போது 50-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது. இதில், பிரதமரின் ஜன்தன் திட்டம் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளது.
ஜன்தன் திட்டத்தின் கீழ் ஜீரோ பேலன்ஸ்-ல் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் என்பதால், தொடக்கத்தில் இந்த திட்டத்தால் பொதுத் துறை வங்கிகள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் தற்போது 2 லட்சம் கோடிக்கும் மேலான பணம் இருப்பு உள்ளது.
சர்வதேச அளவில் நிதித்துறைக்கான காலநிலை சவால் மிகுந்ததாக உள்ளது. இதன் காரணமாக, பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (Multilateral Development Banks) உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களின் செயல் திறன் குறைவாகவே உள்ளது. நிதிச் சந்தையில் நிலவும் சவால்களைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்களும், வணிகர்களும் முடிவுகளை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடன் பிரச்சினை குறித்து விழிப்புடன் இருக்கிறது. வரும் தலைமுறைக்கு சுமை ஏற்படாமல் இருக்க நிதி நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.