இரு மாத முயற்சியால் கோவையில் ஒரே நாளில் ரூ.3,749 கோடி கடனுதவி வழங்கல்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

By இல.ராஜகோபால்

கோவை: ‘‘நிதியுதவி தேவைப்படுவோரை கண்டறிந்து உதவும் நோக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொண்ட முயற்சி காரணமாக இன்று ஒரே நாளில் ரூ.3,749 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றுமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) மற்றும் மாநில அளவிலான வங்கிகள் கமிட்டி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) ஒருங்கிணைப்பு சார்பில் மாபெரும் கடன் உதவி வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இன்று (அக்.3) நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்து வங்கி கடனுதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியது: “இந்த முயற்சி ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக தொழில்கள் நடக்கும் இடங்களில் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் தொடங்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் இதுபோன்ற பல்வேறு நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தினாலும் தேவைப்படும் அனைவரும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வங்கிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் அனைவருக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் காணொலி வாயிலாக பின்தங்கிய மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தி பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகள் அந்த பட்டியிலில் இருந்தன. மாவட்ட அளவில் செயல்முறைபடுத்தப்பட்ட பின் தற்போது பிளாக் அளவில் நடைமுறைபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அதன் விளைவாக ரீடெயல் லோன் பிரிவில் 23,800 பேர் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பயன்பெற்றுள்ளனர் அவர்களுக்கு ரூ.1,278 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. மிகச்சிறிய அளவிலான தொழில்களை நடத்துவோருக்கு சொத்து பிணையமின்றி கடனுதவி வழங்கும் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் 2,904 புதிய முத்ரா கடனுதவி ரூ.25.83 கோடி வழங்கப்படுகிறது.

‘ஸ்டேண்ட் அப் இந்தியா’ திட்டத்தின்கீழ் 18 பேருக்கு கிட்டதட்ட ரூ.4 கோடி கடனுதவி மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் 7,911 பேருக்கு ரூ.9.27 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது. ‘எம்எஸ்எம்இ’ தொழிலுக்கு ரூ.1,043 கோடி, விவசாயிகளுக்கு 2,867 பேருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்காக ரூ.30 கோடி வழங்கப்படுகிறது. 2,500-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவை சேர்ந்தவர்களுக்கு என ஒரே நாளில் மொத்தமாக ரூ.3,749 கோடி கடனுதவி வழங்கப்படுகிறது.

வங்கிகளை தேடி அழைந்த காலம் கடந்து தற்போது வாடிக்கையாளர்களை தேடி வங்கிகள் கடன் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘எம்எஸ்எம்இ’ தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் கோவையில் இரண்டாவது சிட்பி வங்கி திறக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

கனரா வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சத்தியநாராயண ராஜூ, ‘நபார்டு’ சேர்மன் சாஜி, ‘சிட்பி’ சேர்மன் சிவசுப்ரமணியராமன், ‘ஐஓபி’ வங்கி நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவட்சவா, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வங்கி கடன் கிடைக்கவில்லை என சத்தமிட்ட நபரால் பரபரப்பு: நிகழ்ச்சியின்போது, சதீஷ் என்ற தொழில்முனைவோர் தனக்கு வங்கி கடன் உதவி கிடைக்கவில்லை என சத்தமிட்டதால் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வங்கி அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் அவரை சமாதனம் செய்ய முயன்றனர். அப்போது அவரை மேடைக்கு அழைத்து தனது பிரச்சினையை மைக்கில் தெரிவிக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறுவுறுத்தினார்.

இதையடுத்து மேடையில் ஏறிய அந்நபர், காந்திபுரம் பகுதியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அலுவலகம் அமைத்து தொழில் செய்து வருவதாகவும், கரோனா நோய்தொற்று பரவல் தாக்கத்தின் காரணமாக தொழிலில் கடும் நஷ்டம் அடைந்ததாக கூறினார். அதில் இருந்து மீண்டு வர சாய்பாபா காலனியில் உள்ள வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தேன். இதுவரை கடனுதவி கிடைக்கவில்லை என்றார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE