புதுடெல்லி: உள்நாட்டைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்(எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து, மேலும்156 ‘பிரசந்த்’ இலகு ரக ஹெலிகாப்டர்களை வாங்க ராணுவமும், விமானப்படையும் முடிவு செய்துள்ளன.
பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் 5.8 டன் எடையில் ‘பிரசந்த்’ என்ற பெயரில் இலகுரக ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இதில் 20 எம்.எம் குண்டுகளை பயன்படுத்தக் கூடிய துப்பாக்கி, 70 எம்எம் ராக்கெட் குண்டுகள் மற்றும் வான் தாக்குதலுக்கான ஏவுகணைகளை வீசும் வசதிகள் உள்ளன. ஆயுதங்களுடன் இந்த ‘பிரசந்த்’ இலகு ரக ஹெலிகாப்டர் 16,400 அடி உயரம் பறக்கும் திறன் வாய்ந்தது. உலகிலேயே, தாக்குதல் நடத்தும் திறனுடன் கூடிய ஒரே இலகு ரக ஹெலிகாப்டர் இதுதான். இதில் 45 சதவீதபாகங்கள் உள்நாட்டில் தயாரானவை.
எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.3,887 கோடி மதிப்பில் ஏற்கனவே 25 பிரசந்த் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டு, அதில் 10 விமானப்படையிலும், 15 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது ராணுவத்தில் மேலும் 90 பிரசந்த் ஹெலிகாப்டர்கள், விமானப்படையில் 66 ஹெலிகாப்டர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தபின் இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஆர்டர் கொடுக்கப்படும்.