ஜி20 நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும்: மூடிஸ் நிறுவனம் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அடுத்த சில ஆண்டுகளில் ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையின் வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மேம்படும். படித்த இளைஞர்கள், நகர்மயமாக்கல் காரணமாக வீடு மற்றும் கார்களுக்கான தேவை அதிகரிக்கும்.

மேலும், உள்கட்டமைப்பு துறையில் இந்திய அரசின் முதலீட்டின் காரணமாக, இரும்பு மற்றும் சிமெண்ட் துறை வளர்ச்சி காணும். மக்களிடையே உருவாகும் தேவை அதிகரிப்பால் உற்பத்தித் துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறைகள் ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சிகாணும். அந்த வகையில், அடுத்த சில ஆண்டுகளிலேயே ஜி20 நாடுகளில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருக்கும். அதே சமயம், பொருளாதாரக் கொள்கையில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக முதலீடுகள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்று மூடிஸ் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE